கடல் குறித்த ஆய்வில் இந்தியாவின் முதல் முயற்சியான சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆய்வு வாகனத்தின் சோதனை நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.
மனிதர்களால் தொட்டுப்பார்க்க முடியாத இடங்களாக கருதப்பட்ட விண்வெளியையும், கடலின் ஆழத்தையும் சமீபத்திய தொழில்நுட்ப உதவியுடன் உலக நாடுகள் பல ஆராய்ந்து வருகின்றன. அவர்களுக்கு நிகராக இந்தியாவும் இஸ்ரோ மூலமாக செவ்வாய், சந்திரன், சூரியன் ஆகியவற்றை விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்து சாதனை செய்துள்ளது.
அந்த வகையில் அடுத்த நகர்வாக ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் இந்தியா ஈடுபட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமுத்ரயான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆழ்கடல் ஆய்வு வாகனத்தில் 3 இந்திய ஆய்வாளர்கள் கடலில் ஆழத்திற்கு சென்று முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனம் சுமார் 6000 மீட்டர் கடல் ஆழத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி வாகனத்தின் சோதனை இந்திய துறைமுகங்களில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
அதன்பின்னர் சோதனை முயற்சியாக முதலில் 500 மீட்டர் வரை நீர்மூழ்கி வாகனம் கடல் ஆழத்திற்கு சென்று திரும்பும் என்றும், அதன்பின்னர் 6000 மீட்டர் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் சென்று அங்குள்ள கனிம வளங்கள், உயிரினங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K