புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள், சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மாநிலங்களில் மதுக்கடைகள் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே மக்களிடையே மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு மனநிலையும் இருந்து வருகிறது. அவ்வாறாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் சம்ரவட்டம் என்ற பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை ஒன்று சமீபத்தில் புலம்பரம் என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த புதிய மதுக்கடை மீது கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் மதுக்கடையின் முன்பக்கம் சேதமான நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பெட்ரோல் குண்டை வீசியது அப்பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து 3 சிறுவர்களையும் கைது செய்த போலீஸ் அவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதித்துள்ளனர்.
Edit by Prasanth.K