Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் வந்தது.
முடக்கத்தான் இலை, வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக்கொண்டவை. முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.
முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும்.
முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூலநோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதுமானது.