Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது.
மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், வெட்டி வேர் 200 கிராம், அகில் கட்டை 200 கிராம், சந்தனத் தூள் 300 கிராம், கார்போக அரிசி 200 கிராம், தும்மராஷ்டம் 200 கிராம், விலாமிச்சை 200 கிராம், கோரைக்கிழங்கு 200 கிராம், கோஷ்டம் 200 கிராம், ஏலரிசி 200 கிராம், பாசிப்பயறு 500 கிராம் இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.