Publish Date: Mon, 02 Jul 2018 (15:11 IST)
Updated Date: Mon, 02 Jul 2018 (15:21 IST)
சென்னை மாநகர பேருந்தின் டிரைவர் பேப்பர் படித்தவாறே பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியிலிருந்து திருவான்மியூர் வரை செல்லும் 47D சென்னை மாநகரப் பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர், வண்டியை இயக்கியவாறே திடீரென நியூஸ் பேப்பரை எடுத்து ஸ்டியரிங் மேல் வைத்து படிக்க ஆரம்பித்தார். ரோட்டை பார்த்த படியும் பேப்பரை பார்த்தபடியுமாய் அவர் பேருந்தை இயக்கினார்.
இதனால் அதிர்ந்துபோன பயணிகள், எங்கே இந்த ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிடுவாரோ என பயந்தவாறே பயணம் செய்தனர். நேரம் ஆகியும் ஓட்டுநர் தொடர்ந்து பேப்பர் படித்துக் கொண்டே இருந்ததால், பொறுமையை இழந்த ஒரு சில பயணிகள் எங்களின் உயிரோடு விளையாடாதீர்கள். பேப்பர் படிப்பதை நிறுத்திவிட்டு வண்டியை இயக்குங்கள் என கூறியுள்ளனர். இதனை காதில் வாங்காத அந்த அதிமேதாவி ஓட்டுநர் தொடர்ந்து பேப்பர் படித்துக் கொண்டே இருந்தார்.
இதனை அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து அம்பத்தூர் பணிமனைக்கு சென்று புகார் அளித்தார். அதிகாரிகள் அந்த ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மக்களின் உயிரோடு விளையாடும் இதுமாதிரியான ஓட்டுநர்களை துறை ரீதியாக தண்டிப்பதை விட்டுவிட்டு அவரின் ஒட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மாதிரியான ஓட்டுநர்களுக்கு புத்தி வரும்.