Publish Date: Tue, 08 Aug 2017 (16:23 IST)
Updated Date: Tue, 08 Aug 2017 (16:33 IST)
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் வழங்கியது போன்று மாடுகளுக்கு ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்த பணி தற்போது தமிழகம் மாநிலம் கோவையில் தொடங்கியுள்ளது.
மாடுகளுக்கு ஆதார் எண் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கோவை, கடலூர், சேலம், வேலூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மாடுகளுக்கு ஆதார் எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சோதனை முயற்சியை முதலில் கோவையில் தொடங்கியுள்ளனர்.
மக்களுக்கு 10 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டது. அதே போல் மாடுகளுக்கு 12 இலக்க எண் வழங்கப்பட உள்ளது. கலப்பின மாடு, நாட்டு மாடு, எருமை மாடு என மூன்று விதமாக வர்ணங்களில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. மாட்டின் புகைப்படம், அடையாளங்கள், வயது, இனம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஆதார் அட்டையில் இடம்பெறும். இதன்மூலம் திருட்டு, இறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவை கட்டுப்படுத்தப்படும் என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தற்போது 105 மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக பணி நடைப்பெற்று வருகிறது. முதலில் 1 லட்சம் அட்டைகள் தயார் செய்து வழங்கப்பட உள்ளதாம்.