Publish Date: Sat, 28 Jul 2018 (12:42 IST)
Updated Date: Sat, 28 Jul 2018 (13:05 IST)
திருமணம் செய்து கொள்வதாய் வாக்களித்து வாலிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த புகாரில் சிறை சென்ற ஸ்ருதி ஜாமினில் வெளியே வந்து போலீசார் மீது பல புகார்களை கூறியுள்ளார்.
இன்னும் வெளிவராத ஒரு திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ருதி என்கிற இளம்பெண், முகநூல் மற்றும் மேட்ரிமேனியல் இணையதளங்கள் மூலம் சென்னை, கோவை மற்ரும் வெளிநாட்டில் பணிபுரியும் ஐ.டி வாலிபர்களை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி அளித்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தார். இதற்கு அவரின் தாய் உட்பட மொத்த குடும்பமும் உதவியாக இருந்துள்ளது.
அப்படி ஸ்ருதியிடம் ரூ.45 லட்சத்தை இழந்த ஒருவர் கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணையில் பல வாலிபர்கள் இவரிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. எனவே, ஸ்ருதி, அவரின் தாய், வளர்ப்பு தந்தை, சகோதரர் என 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று ஜாமீனில் ஸ்ருதி வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னை சுந்தர் என்பவர் ஒருதலையாக காதலித்தார். ஆனால், அவரின் காதலை நான் ஏற்கவில்லை. எனவே, என்னை பழிவாங்கவே அவர் பொய் புகார் கொடுத்துள்ளார். அதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.
என்னை போலீசார் விசாரிக்கும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். சைபர் கிரைம் பெண் இன்ஸ்பெக்டர்கள் இருவர் என்னிடம் உதவி கமிஷனரை அட்ஜஸ்ட் செய் என நிர்பந்தம் செய்தனர். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்க என்னை நிர்வானமாக்கி புகைப்படம் எடுத்தனர். மேலும், அதை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர். நிர்பயா போல் உன்னை கூட்டாக கற்பழித்து சாலையில் வீசி விடுவோம் என அங்கிருந்த போலீசார் மிரட்டினர்.
போலீசாரின் அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பேன்” என அவர் தெரிவித்தார்.