Publish Date: Thu, 12 Jul 2018 (12:29 IST)
Updated Date: Thu, 12 Jul 2018 (17:24 IST)
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதுற்கு அதிமுக அமைச்சர்கள் மழுப்பலாக பதில் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா தொண்டர்கள் முன் பேசும் போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகமாக நடக்கிறது” என குறிப்பிட்டு பேசினார்.
அவர் இவ்வளவு வெளிப்படையாக கூறிய பின்பும், அவர் அந்த அர்த்தத்தில் கூற வில்லை என அதிமுக அமைச்சர்கள் சமாளிபிகேஷனில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது “ சொட்டு நீர் பாசனம் என அமித்ஷா பேசியதை சிறுநீர் பாசனம் என ஹெச்.ராஜா மொழி பெயர்த்துள்ளார். அதுபோல், அதிமுகவை பற்றி அமித்ஷா நல்ல விதமாகத்தான் பேசியிருப்பார். ஹெச்.ராஜா அதை தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்” என சமாளித்தார்.
அதேபோல், அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது “யார் ஊழல் செய்தார்கள் என மக்களுக்கு தெரியும்” என மழுப்பினார்.
இதுபற்றி அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்ட போது “பாஜக தலைவர்கள் எந்த மாநிலம் சென்று பேசினாலும், ஊழல் அதிகமாக இருக்கிறது எனவே பேசுவது வழக்கமான ஒன்றுதான்” என முட்டு கொடுத்தார்.
பாஜகவின் தயவால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுவதால், அமித்ஷாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க பயந்தே அதிமுக அமைச்சர்கள் இப்படி சமாளித்து பதில் கூறுகின்றனர் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.