Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன், ஒன்றிணைந்த அதிமுக அணியில் இருந்து சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன் தன்னுடை ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் தலைமையாக செயல்படும் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ நேற்று தினகரனை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளார். அப்போது, ரிசார்ட்டில் உள்ள சில எம்.எல்.ஏக்களுக்கு சென்னையில் இருந்து தொலைப்பேசி அழைப்பு சென்றதாம். அதில் பேசியவர்கள், ஆட்சி கலைப்பிற்காக நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆட்சி போய்விட்டால் நம்மால் மீண்டும் வெற்றி பெற முடியாது. நீங்கள் எதற்காக தினகரன் பக்கம் இருக்கிறீர்களோ, அதை உங்களுக்கு நாங்கள் தருகிறோம். இங்கே வந்துவிடுங்கள் என வலை விரித்தார்களாம்.
எனவே, தினகரன் பக்கம் இருக்கும் சில எம்.எல்.ஏக்கள் விரைவில் எடப்பாடி பக்கம் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.