Publish Date: Tue, 21 Jul 2026 (10:17 IST)
Updated Date: Tue, 21 Jul 2026 (10:19 IST)
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, மாநிலம் முழுவதும் உள்ள 8,193 கோயில்களுக்கு இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்காக வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவம் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்தப் படிவத்தை இணைய வழி மூலமாகவே பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் வழங்கலாம் அல்லது விரைவுஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களின் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு ஆன்மீக மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.