Publish Date: Fri, 21 Aug 2026 (15:28 IST)
Updated Date: Fri, 21 Aug 2026 (15:30 IST)
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர கமிஷனாக இருந்தவர் அருண் ஐபிஎஸ். இவர் திமுகவின் ஆதரவோடு பல ஊழல்களை செய்தார் என பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தொடர்ந்து கூறி வந்தார். சென்னையில் தனியார் நட்சத்திர பார்களை அவர் நடத்தி வருவதாகவும், திமுகவுக்கு சாதகமான கட்ட பஞ்சாயத்துகளை அவர் செய்து வருவதாகவும் அப்பட்டமான குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறினார்.
இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார் அருண் ஐபிஎஸ். ஆனால் ஆட்சி மாறி தவெக ஆட்சிக்கு வந்ததும் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஒருபக்கம், அருண ஐபிஎஸ் லஞ்ச ஊழல் துறையில் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன்பின் அருணிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கும் ஆதரவாக சவுக்கு சங்கர் பேசி வருகிறார். ஒரு பக்கம் அருண் ஐபிஎஸ் தொடர்பான விஷயங்களையும் அவர் அடிக்கடி பேசி வருகிறார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது அருண் ஐபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னைப் பற்றி தொடர்ந்து ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை சவுக்கு சங்கர் பேசி வருகிறார். இதனால் என்னுடைய நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது.
இதனால் மன உளைச்சல், வேதனை, செய்யும் பணியில் பாதிப்பு உள்ளிட்டவற்றை நான் எதிர்கொண்டு வருகிறேன். ஆகையால் சவுக்கு சங்கரிடமிருந்து எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தர வேண்டும் என ஐபிஎஸ் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க