Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
ஜீயரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு ஜீயரை வச்சு செய்தனர். இதனையடுத்து ஜீயர் தனது பேச்சுக்கு ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அதை ஏற்காமல், எங்களுக்கும் கல் எரியத் தெரியும், சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று ஜீயர் பேசியது ஏற்கத்தக்கது அல்ல. ஒருவேளை மடாதிபதி ஆவதற்குக் கல் எரிவதும், சோடா பாட்டில் வீசுவதும் தான் தகுதி என்றால், தமிழகத்தில் பல பேர் அதற்குத் தகுதியானவர்களே. அதோடு அரிவாள் கொடுக்கிறோம் அதையும் ஜீயர் பழகிக்கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும் என்றார் பாரதிராஜா.