Publish Date: Mon, 20 Jul 2026 (12:35 IST)
Updated Date: Mon, 20 Jul 2026 (12:37 IST)
மானங்கெட்ட முதலமைச்சரே, எங்களை கோமாளிகள் என்றா நினைத்து கொண்டிருக்கிறாய்? சட்டமன்றத்தை கூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து தான் உன்னை அனுப்புவோம்" என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்தது வரவேற்கத்தக்கது. இந்த கைதை கண்டித்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது கேவலத்தின் உச்சக்கட்டம். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் தகாத வார்த்தைகளை பேசி முதலமைச்சரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தன் கட்சியின் உறுப்பினர்களை நாகரீகமாக, கண்ணியமாக, மரியாதையாக நடந்து கொள்ளச் செய்வது தான் தலைமையின் கடமை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றெல்லாம் வசனம் பேசியவர்கள், பிரதமரை, முதலமைச்சரை கேவலமாக பேசுவதை ஊக்குவிப்பது அக்கட்சியின் அழிவை உறுதி செய்கிறது. இப்படி வெட்கம் கெட்டு பேசுவது திமுகவின் உடன்பிறந்தது என்று உலகிற்கு தெரிந்தாலும், தங்களை கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில், திமிரில் சகட்டு மேனிக்கு யாரையும் விமர்சிக்கலாம் என்று இதுகாறும் நினைத்திருந்தவர்களுக்கு இது போன்ற கைதுகள் பாடம் புகட்டட்டும்.
கடந்த திமுக ஆட்சி நடைபெற்ற போது, அன்றைய திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும், தரக்குறைவாக பேசியது குறித்து பல்வேறு புகார்களை பாஜக அளித்திருந்த நிலையில், தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்கள் உத்தரவிடுவதோடு, மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.