Publish Date: Wed, 27 May 2026 (18:02 IST)
Updated Date: Wed, 27 May 2026 (18:05 IST)
பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது, தமிழகத்தின் மிக முக்கியமான பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் பிரதமரிடம் முன்வைத்தார்.
குறிப்பாக, மாநில அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் பாடுவதை உறுதி செய்ய உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை முன்னெடுப்பது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிரானது என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜல் சக்தி அமைச்சகத்திடம் வலியுறுத்துமாறு அவர் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளதை முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
2026-ஆம் ஆண்டில் மட்டும் 12 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும், தற்போது 58 மீனவர்கள் சிறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, அவர்களை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் தருமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநில உரிமைகளை நிலைநாட்டும் முதலமைச்சரின் இந்தச் சந்திப்பு, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.