Publish Date: Fri, 24 Nov 2017 (09:51 IST)
Updated Date: Fri, 24 Nov 2017 (09:54 IST)
சென்னை ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.வின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை, ஓட்டுப்போட வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார் காரணமாக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தற்போது தேர்தல் தேதியை அறிவித்தால்தான் அந்த தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் கட்டாயத்தில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. ஏனெனில், தேர்தல் ஆணைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தலில் நடத்தி முடிக்க வேண்டும். எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே தேர்தலை நடத்தி முடிக்க வாய்ப்புள்ளது.
அதோடு, இரட்டை இலை யாருக்கு என்கிற குழப்பமும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச் சாவடிகளிலும், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் வி.வி.பேட் எந்திரங்களை பயன்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.