Publish Date: Thu, 07 Jul 2022 (13:03 IST)
Updated Date: Thu, 07 Jul 2022 (13:09 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் வெளியான நிலையில் 62% பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வந்தன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் குறைபாடு ஏற்படும் என பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.
கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பரில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் – டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியானது.
அதில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 62 சதவீதம் மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர். அதிகமான மாணவர்கள் கணிதத்தில் அரியர் வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் நேரடி தேர்வை எதிர்கொள்ளாததே இதற்கு காரணம் என கருதப்படுகிறது.