Publish Date: Thu, 22 Feb 2018 (11:36 IST)
Updated Date: Thu, 22 Feb 2018 (11:39 IST)
தமிழகத்தின் முதல்வர் பதவி தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்-ஸின் தர்ம யுத்தம் முடிந்து இரு அணிகளும் இணைந்தது. ஆனாலும், ஓ.பி.எஸ்-ஸுக்கும், அவரது அணியில் இருந்தவர்களுக்கும் சரியான அங்கிகாரம் வழங்கப்படவில்லை என செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேனியில் பேசிய ஓ.பி.எஸ் “பிரதமர் மோடி கூறியதால்தா இரு அணிகளையும் இணைத்தேன். கட்சியை காப்பாற்ற அணிகள் இணைப்பு அவசியம் என மோடி கூறினார். எனக்கு கட்சி பதவி மட்டும் போதும். அமைச்சர் பதவி வேண்டாம் என மோடியிடம் கூறினேன். ஜெ. எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து விட்டார். எனக்கு பதவி ஆசை கிடையாது” என அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தங்க தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ “ஓ.பி.எஸ் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். இரு அணிகளும் இணைந்த போது ஒரு ஆண்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருப்பர். அதன் பின்பு ஓ.பி.எஸ் முதல்வர் என்றே அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தற்போது முதல்வர் பதவியை தர எடப்பாடி மறுக்கிறார். எனவேதான், மோடியின் துணையுடன் முதல்வர் பதவியில் அமர ஓ.பி.எஸ் துடித்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவை பாஜகதான் இயக்கி வருகிறது. அதனால்தான், அதிமுகவில் ஒரு பிரச்சனை என்றால் பாஜக கருத்து தெரிவிக்கிறது” எனப் பேசினார்.