Publish Date: Wed, 17 Oct 2018 (12:08 IST)
Updated Date: Wed, 17 Oct 2018 (12:10 IST)
சென்னையின் பிரபல வணிக வளாகமான EA எனப்படும் எக்ஸ்பிரஸ் அவென்யூ இன்று ஒருநாள் பராமரிப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரெஸ் அவென்யூ பல்வேறு ஷோரூம்கள் மற்றும் திரையரங்கங்களோடு இயங்கி வருகிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த வணிக வளாகம் இன்று ஒருநாள் பராமரிப்புக் காரணங்களுக்காக மூடப்படுவதாக வளாகத்தின் நிர்வாகம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
சென்னையில் சமீபத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த வளாகமும் டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் இருந்தே தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறது. அதனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வளாகம் மூடப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு சந்தேகம் உருவாகியுள்ளது. ஆனால் வளாகத்தின் இணையதளத்தில் இதுகுறித்த எந்த காரணங்களும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் இந்த வளாகத்தில் உள்ள சத்யம் சினிமாஸின் எஸ்கேப் திரையரங்குகள் வழக்கம் போல இயங்குகின்றன.