Publish Date: Mon, 15 Jun 2020 (15:37 IST)
Updated Date: Mon, 15 Jun 2020 (15:39 IST)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதை அடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:
சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை 12. 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் என அத்தியாவசிய பணிகள் அனுமதிக்கப்படும்
வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம்
அனுமதிக்கப்படும்.
மேலும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது என்றும், மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என்றும், ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது