Publish Date: Wed, 27 Apr 2016 (11:25 IST)
Updated Date: Wed, 27 Apr 2016 (11:41 IST)
திண்டுக்கல் அருகே மாணவியை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே சிறுமலை பழையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருபவர் ஜெசிந்தாசகாயராணி. மதிய உணவை பள்ளியில் சத்துணவையே சாப்பிடிவாராம். பின்னர் சாப்பிட்ட தட்டை மாணவிகளை கழுவச் சொல்வாராம். சம்பவத்தன்று அவர் சாப்பிட்ட தட்டை 6ம் வகுப்பு மாணவியை கழுவ சொல்லியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அந்த மாணவியை செருப்பால் அடித்துள்ளார்.
இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார தொடக்க கல்வி அலுவலர் பாண்டி விசாரணை நடத்தினார். விசாரணையில் தலைமை ஆசிரியை மாணவியை செருப்பால் தாக்கியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியையை தொடக்ககல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.