ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தது 3 நாட்கள்தான்: தீபக் அதிர்ச்சி தகவல்!
ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தது 3 நாட்கள்தான்: தீபக் அதிர்ச்சி தகவல்!
Publish Date: Mon, 25 Sep 2017 (16:27 IST)
Updated Date: Mon, 25 Sep 2017 (16:35 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது நடந்தவை குறித்து பல தகவல்கள் தற்போது தான் வெளிவர ஆரம்பித்துள்ளது. இவை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. அவரது மரணம் மர்மம் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 75 நாட்களும் மர்ம நாட்களாகவே உள்ளது.
அந்த நாட்களில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குறித்து இந்த வருடம் செப்டம்பரில் சில தகவல்கள் வருகின்றன.
இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த போது ஆளுநர் அவரை கண்ணாடி அறைக்கு வெளியே நின்று பார்த்தர். அப்போது ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என கூறினார்.
மேலும் அந்த நேரத்தில் தான் மருத்துவமனையில்தான் இருந்ததாகவும், அப்போது ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்ததாக தீபக் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். முழுவதும் குணமடைந்துவிட்டார், தான் எப்போது வீட்டுக்கு செல்லவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியது உள்ளிட்ட அனைவரும் கூறியதும் பொய்யா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.