Publish Date: Fri, 04 Oct 2019 (15:28 IST)
Updated Date: Fri, 04 Oct 2019 (15:31 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவை கோருவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக அலுவலகத்துக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிக்குமாறு, சமீபத்தில், சென்னைக்கு வருகை தந்த மோடியிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாஜக அலுவலகத்திற்கு சென்று பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க கோரியும், பாஜக தலைவர்கள் அதிமுகவிற்காக பரப்புரை செய்ய கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, பெரும் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.