Publish Date: Mon, 29 Jun 2026 (11:03 IST)
Updated Date: Mon, 29 Jun 2026 (11:09 IST)
அதிமுகவுக்கு இது போதாத காலம் போல. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக கூட அதிமுக அமர முடியவில்லை. தமிழக அரசியலில் அதிமுக 3வது இடத்திற்கு சென்று விட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அதிமுக நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது.
எனவேதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் 24 பேர் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்ததோடு சட்டசபையில் முதல்வர் விஜய் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது அதையும் ஆதரித்து வாக்களித்தனர். அதுமட்டுமில்லாமல் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.. இதில் சி.விஜயபாஸ்கர் மட்டும் இன்னும் தவெகவில் இணையவில்லை. ஆனால், ஜுலை 1 அல்லது 2ம் தேதி அவரும் தவெகவில் இணைவார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில்தான், கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கர் தற்போது தனது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
அதிமுகவிலிருந்து ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்ட நிலையில் 6வதாக எம்.ஆர் விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அநேகமாக விரைவில் எம்.ஆர் விஜய பாஸ்கர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.