Publish Date: Mon, 21 Feb 2022 (11:51 IST)
Updated Date: Mon, 21 Feb 2022 (11:52 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல குறைந்து வருகின்றன. இந்நிலையில் தேர்தலுக்காக தமிழக அரசு கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் 92% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. குஜராத்தை போல தமிழகமும் விரைவில் 10 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்” என்று தெரிவித்துள்ளார்.