Publish Date: Sat, 11 Jul 2020 (18:02 IST)
Updated Date: Sat, 11 Jul 2020 (18:23 IST)
சென்னையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்த மனைவிக்கே மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை மதுரை வாயல் பகுதியைச் சேர்ந்த லேத் பட்டறை ஊழியர் பிருத்விராஜ். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று காலை திடீரென தனது வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டார். அதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்த பிருத்விராஜன் ‘எனது முதல் மனைவி சத்யாவின் சகோதரர்கள் என்னைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தினர். மேலும் என்னை வலுக்கட்டாயமாக மீண்டும் அவருக்கே கல்யாணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் நான் தீவைத்துக் கொளுத்திக் கொண்டேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு அவர் இறந்துள்ளார்.
இதையடுத்து தலைமறைவாக உள்ள சத்யா மற்றும் அவரது இரு சகோதரர்களைப் போலிஸார் தேடி வருகின்றனர்.