Publish Date: Wed, 06 Mar 2019 (16:10 IST)
Updated Date: Wed, 06 Mar 2019 (16:12 IST)
பிரதமர் நரேந்திர மோடி கூட்டணிக் கட்சிகளுடனான பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தடைந்துள்ளார்.
பிரதமர் மோடி இந்த ஆண்டில் இன்று மூன்றாவது முறையாக தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக அணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 100 ஏக்கர் நிலத்தில் பிரமமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதியம் 12 மணியளவில் டெல்லியில் இருந்து விமானத்தில் கிளம்பிய மோடி சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளாம்பாக்கம் செல்கிறார் மோடி. அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அந்த மேடையில் அதிமுக தலைமையிலானக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி வருகைக்கு எந்த அளவிற்கு உற்சாக வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு எதிர்ப்பும் உள்ளது. அவருக்கு எதிராக கருப்புக் கொடிக் காட்டும் போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கோபேக்மோடு ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆகிவருகிறது.