Publish Date: Tue, 05 Jul 2022 (11:29 IST)
Updated Date: Tue, 05 Jul 2022 (11:32 IST)
நாமக்கலில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது ஆஞ்சநேயர் கோவில். மேற்கூரை அற்ற இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டிலேயே 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருபவர்கள் தரிசிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.20 தரிசன கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
பலர் குடும்பத்தோடு வரும்போது தரிசனத்திற்காக பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் தரிசன கட்டண முறையை நீக்கும்படி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இனி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன கட்டணம் முறை நிறுத்தப்படுவதாகவும், இனி பக்தர்கள் இலவசமாகவே தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.