Publish Date: Sun, 02 Sep 2018 (12:26 IST)
Updated Date: Sun, 02 Sep 2018 (12:28 IST)
இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும். இந்த தீர்ப்பு வெளியானவுடன் ஈபிஎஸ் ஆட்சி கவிழும். அந்த சமயத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட ஒருசிலர் தவிர மற்ற அனைவரும் அம்முகவில் சேர்வார்கள். நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியமே இருக்காது” என்று கூறினார்.
மேலும், பன்னீர் செல்வம் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு டெபாசிட் பறிபோகும். அவரை மக்கள் தோற்கடித்து விடுவார்கள்” எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் “தினகரன் வானத்தை அண்ணாந்து பார்த்து பகல் கனவு காண்கிறார். அதனால், பலவாறாக பிதற்றிக்கொண்டிருக்கிறார். அவரின் கூறும் வார்த்தைகளில் ஒன்று கூட உண்மை கிடையாது என தமிழக மக்களுக்கு தெரியும். திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை அதிமுகவே வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல்களோடு தினகரன் அணி அரசியலில் இருந்தே காணாமல் போகும்” என அவர் தெரிவித்தார்.