Publish Date: Thu, 13 Jan 2022 (12:51 IST)
Updated Date: Thu, 13 Jan 2022 (12:54 IST)
நாளை முதல் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் இன்றே பலரும் கூடியதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கு நேற்று கொடியேற்றி விழா தொடங்கப்பட்டது. ஆனால் அரசின் கட்டுப்பாடுகளினால் நாளை முதல் 18ம் தேதி வரை 5 தினங்களுக்கு பழனி கோவில் திறக்கப்படாது என்பதுடன், தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் பழனி கோவிலுக்கு இன்றே தரிசனத்திற்காக பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் குவிந்ததால் பழனி நகரமே ஸ்தம்பித்துள்ளது. 600 போலீசாரே பாதுகாப்பு பணிகளில் உள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாமிர்த கடைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் பஞ்சாமிர்தம் காலியான நிலையில் பஞ்சாமிர்தம் கொண்டு வரும் வாகனங்களும் கூட்ட நெரிசலில் வர முடியாத சூழல் காரணமாக பல பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.