Publish Date: Fri, 24 Jul 2026 (16:36 IST)
Updated Date: Fri, 24 Jul 2026 (16:37 IST)
விஜய் தலைமையிலான தவெக கட்சி ஆட்சிக்கு வந்தபின் அந்த கட்சி பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தானே ஆகிறது.. அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் திமுக, அதிமுக, அமமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ சட்ட ஒழுங்கு பிரச்சனையில் அப்படியெல்லாம் கால அவகாசம் கொடுக்க முடியாது என சொல்கிறார்கள்.
ஒருபக்கம், மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. அதேபோல் காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு இதுவரை திறந்து விடப்படவில்லை. இதற்கெல்லாம் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என திமுக, பாஜக, தேமுதிக, அதிமுக போன்ற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஒருபக்கம் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது தவெக அமைச்சர்கள் நேற்று தியேட்டருக்கு சென்று ஜனநாயகம் படத்தை பார்த்து அழுது கொண்டிருந்தார்கள் என அந்த எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அரிசியின் விலை ஒரு டன்னுக்கு 15 ஆயிரம் வரை அதிகரித்துவிட்டது. மக்கள் அரிசியை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். அதேபோல் ஒரு பக்கம் எல் நினோ வந்துவிட்டது. தற்போது ஜூலை முடியப்போகிறது. ஆனாலும் இதுவரை மழை பெய்யவில்லை. விவசாயிகள் பிரச்சனை சந்திப்பார்கள்.
இதற்கெல்லாம் மாநில மற்றும் மத்திய அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சினிமாவை பார்த்து அழுதுகொண்டு உட்கார்ந்து இருப்பதல்ல ஆட்சி. மக்கள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. திருநெல்வேலியில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம் நடந்திருக்கிறது. இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.. மக்களை பாதுகாக்கத்தான் காவல்துறையே தவிர மக்களை கொல்வதற்காக அல்ல. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க