Publish Date: Fri, 12 Jun 2020 (13:07 IST)
Updated Date: Fri, 12 Jun 2020 (13:10 IST)
புதுக்கோட்டை அருகே மேலவசந்தனூர் கண்மாய் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக வெளியாத புரளியால் புதுக்கோட்டையில் பரபரப்பு எழுந்துள்ளது.
இன்று காலை புதுக்கோட்டை பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. அதை தொடர்ந்து மக்கள் பலர் வானத்தில் விமானம் ஒன்று செல்லும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் எந்த விமானமும் வானில் தென்படவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியருகே விமானம் ஒன்று விழுந்து எரிவதாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் நேரடியாக மேலவசந்தனூர் பகுதியில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலவசந்தனூர் பகுதியில் முட்புதர்கள் மட்டுமே எரிந்து கொண்டிருப்பதாகவும், அங்கு விமானங்கள் எதுவும் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் சமூக வலைதளங்களில் வெளியான இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.