Publish Date: Sat, 19 May 2018 (16:40 IST)
Updated Date: Sat, 19 May 2018 (16:51 IST)
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்ற பரபரப்பு நிலவிய சூழ்நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதுதான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை சரியாக 4 மணிக்கு தொடங்க இருந்தது.
அந்நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் எடியூரப்பா சட்டசபையில் உரையாற்றத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் மிகவும் உருக்கமாக பேசினார். அதன்பின்பு, தான் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே அவர் சோகமாக கிளம்பி சென்றார்.
இதன் மூலம், கர்நாடகாவில் யார் ஆட்சியில் அமரப்போகிறார் என கடந்த சில நாட்களாக இருந்த இழுபறி முடிவிற்கு வந்துள்ளது. எடியூரப்பா தோல்வி அடைந்ததால், காங்கிரஸ்-மாஜத கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்பதால், அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி குமாரசாமி முதல்வராவது உறுதியாகியுள்ளது. விரைவில் குமாரசாமிக்கு ஆளுநர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்ததற்கான பின்னணி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 116 இடங்கள் இருந்தும், 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் வாஜூபாய்வாலா. மேலும், மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது காங்கிரஸ்-மஜத தரப்பு. தீர்ப்பில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
15 நாட்கள் இருக்கிறது. எப்படியாகினும் காங்கிரஸ், மஜத கூட்டணி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை அமைப்போம் என்ற கனவில் இருந்த பாஜகவிற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. எனினும், நேற்று தீர்ப்பு வெளியான பின்பு எம்.எல்.ஏக்களிடம் பாஜக தரப்பு குதிரை பேரம் பேச முயன்றனர் என செய்திகள் வெளியானது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரிடம் எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ என செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது.
ஆனால், காங்கிரஸ்-மஜத தரப்பு தங்கள் எம்.எல்.ஏக்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் பாஜகவால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதை, ராஜினாமா செய்வதற்கு முன்பு சட்டசபையில் வெளிப்படையாகவே எடியூரப்பா தெரிவித்தார். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க போதுமான ஆதரவு இல்லாத நிலையில், ராஜினாமா செய்வதே சரியென்ற முடிவிற்கு பாஜக தலைமை முடிவெடுத்ததாக தெரிகிறது. இது எடியூரப்பாவிற்கும் தெரிவிக்கப்பட்டது.
எனவேதான், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துவிட்டு, சட்டசபையில் உருக்கமாக உரை நிகழ்த்திவிட்டு, தான் ராஜினாமா செய்கிறேன் என அறிவித்து விட்டு எடியூரப்பா சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
webdunia
Publish Date: Sat, 19 May 2018 (16:40 IST)
Updated Date: Sat, 19 May 2018 (16:51 IST)