தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக தொடங்கியுள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய உள்ளதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களான படகு இல்லம், தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், டால்பின் நோஸ், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K