Publish Date: Wed, 30 Jan 2019 (15:03 IST)
Updated Date: Wed, 30 Jan 2019 (15:05 IST)
அதிக வட்டி கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க கிராம மக்கள் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம்., பள்ளப்பட்டி அருகில் உள்ள ரங்கப்பன்கவுண்டன் வலசு கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி இவர் தற்போது கரூரில் வசித்து வருகின்றார். இவர் நிதிநிறுவனம் நடத்தப் போவதாக கூறி பள்ளப்பட்டி, குரும்பபட்டி, புதுப்பட்டி, ஓலிகரண்டூர், குறிக்காரன்பட்டி், ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் 400 பேரிடம் பல கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் தொடர்ந்து பணம் செலுத்தியவர்களுக்கு முறையாக வட்டித் தொகை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களாக அவரைக் காணவில்லை பணம் கொடுத்தவர்கள் தங்களுடைய பணத்தைத் திரும்ப பெறுவதற்காகக் கரூரில் உள்ள அவருடைய அலுவலகத்துக்குச் சென்று பார்த்த போது அலுவலகம் மூடியிருந்தது. மேலும், தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்ச்சித்தும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்து. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ராஜசேகரனிடம் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தனர். மேலும், இந்த கிராம மக்களிடம் சுமார் 400 பேரிடமிருந்து சுமார் 20 கோடிக்கு மேல் ஏமாற்றப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.