Publish Date: Fri, 24 Jul 2026 (22:27 IST)
Updated Date: Fri, 24 Jul 2026 (22:28 IST)
தவெக ஆட்சிக்கு வந்தது முதலே டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது இனிமேல் இருக்காது என மதுப்பிரியர்கள் நினைத்தனர். ஆனால், அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தவெக அமைச்சரோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என தொடர்ந்து சொல்லி வந்தார்.
இதனால், மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் 10 ரூபாய் கூடுதலாக வாங்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர். இதனால், கோபமடைந்த ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை பூட்டிவிட்டு போராட்டம் நடத்தினார்கள். பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்குவதன் பின்னணியில் வேறு காரணங்களும் சொல்லப்பட்டது. கடை வாடகை, சரக்குகளை இறக்குவதற்கான கூலி, பாட்டில்களை வைத்திருப்பதற்கு வாடகை ஆகியவற்றுக்கு பணம் தேவைப்படுகிறது என்றெல்லாம் டாஸ்மாக் ஊழியர்கள் சொன்னார்கள்.
இந்நிலையில்தான், அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தவறு மீண்டும் மீண்டும் நிகழும் பட்சத்தில் தற்காலிக பணியிடை நீக்கம் மற்றும் நிரந்தப் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் ரூ.10-க்கு மேல் கூடுதலாக வசூலித்தால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க