Publish Date: Fri, 13 Jul 2018 (18:10 IST)
Updated Date: Fri, 13 Jul 2018 (19:00 IST)
கரூரில் உள்ள பயணியர் மாளிகையில், மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது அமித்ஷா, தமிழகத்தில் ஊழல் நடைபெற்று வருகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார் என்றதற்கு, எதிர்கட்சிகள், ஆளும் கட்சியை விமர்சிப்பது இயல்பு, ஏற்கனவே, வை.கோ., அன்புமணி ராமதாசு ஆகியோரை தொடர்ந்து தற்போது பா.ஜ.க வின் அமித்ஷாவும் கூறியுள்ளார்.
இதே பிரதமர் மோடி எதை வைத்து பிரதமர் ஆனார். ஏற்கனவே, நடைபெற்ற 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களை சுட்டிக்காட்டி தான் ஆட்சிக்கு வந்தார். 4 ஆண்டுகள் ஆட்சிக்கு வந்து இதுவரை யார் மீதாவது, நடவடிக்கை எடுத்துள்ளார்களா ? இதே பாரத பிரதமர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இலவச ஸ்கூட்டர் தரும் திட்டம் வருகை தந்து தமிழக அரசினை புகழ்ந்ததோடு, தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் தற்போது தான் லோக் ஆயுக்தா சட்ட மசோதோ நிறைவேறியுள்ளது. ஆக., பா.ஜ.க உறுப்பினர்கள் மனு கொடுக்கட்டும் என்றும் எந்த அமைச்சர் ஊழல் செய்துள்ளார் என்பது குறித்து குற்றம் சாட்டட்டும், ஆகவே, அரசியல் ரீதியான குற்றம் சாட்டே தவிர அது ஒரு பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு என்றார்.