Publish Date: Tue, 12 May 2020 (15:05 IST)
Updated Date: Tue, 12 May 2020 (15:07 IST)
தமிழகத்தில் ஆலயங்களையும் விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முருகன்.
தமிழக பாஜக தலைவர் முருகன் tயனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. மக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீளுவதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீள வேண்டும், மன நிம்மதி பெற வேண்டும்.
ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது. இதற்கான தீர்வு ஆலய வழிபாட்டில் தான் உள்ளது. எனவே ஆலயங்களையும் விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். " 'நெஞ்சுக்கு நிம்மதி இறைவன் சன்னதி " என்று சொல்வது போல இறைவன் தரிசனமே மக்களுக்கு அச்சத்தைப் போக்கி ஒரு வித நிம்மதியை அளித்து விடும்.
ஆலயங்களில் நடக்கும் தினசரி வேள்விகள் தகுந்த வழிகாட்டு நெறிமுறையோடு நடத்தப்படும் போது அதுவே தொற்றுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடும். தரிசனத்துக்கான நபர்களை சமூக விலகல் தூரத்தைக் கடைத்துப் பிடித்து ஒருவர் பின் ஒருவராக அனுப்பலாம். இவை தனிநபருக்கும் சமூகத்துக்கும் மிகுந்த ஆறுதல் தரலாம்.
எனவே பக்தர்கள் நலன், ஆலயம் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆலயங்களை விரைந்து திறக்க முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.