Publish Date: Thu, 09 Nov 2017 (11:07 IST)
Updated Date: Thu, 09 Nov 2017 (11:10 IST)
தனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிவரும் தினகரன் “ எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டும் காலை 8.30 மணிக்கு வந்தார். அவரும் போய்விட்டார். காவல் அதிகாரிகள் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. எனது பாதுகாப்பிற்காக அல்லது அந்த அதிகாரியின் பாதுகாப்பிற்கு வந்தார்களா என தெரியவில்லை.
பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் சோதனை நடப்பதாக கேள்விப்பட்டேன். நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும், எங்களை மிரட்டிப்பார்க்கவுமே சோதனை நடக்கிறது. எதையும் சந்திக்கும் தைரியம் எங்களுக்கு உண்டு.
ஜெ.ஜெ. தொலைக்காட்சியை முடக்கியது போல் ஜெயா தொலைக்காட்சியை முடக்கும் வேலை நடக்கிறது என அவர் தெரிவித்தார்.