Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தனது பெயரில் புதிய பேரவை தொடங்க இருக்கிறார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு 100க்கும் மேற்பட்ட தினகரனின் ஆதரவாளர்களை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். எனவே, இதுகுறித்து நேற்று மாலை தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இறுதியில், ஒரு பேரவையை தொடங்குவது என முடிவானது. அதிமுகவிலிருந்து நீக்கப்படுவோர் அதில் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தனது பேரவைக்கு தனி அலுவலகம் அமைக்க தினகரன் முடிவு செய்துள்ளார். தற்போது அந்த பேரவையின் உறுப்பினர் சேர்க்கை படிவம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பேரவையின் தலைவராக தினகரன் செயல்படுவார். மேலும் புதிய மொபைல் ஆப் ஒன்றையும் அவர் விரைவில் அறிக்கவுள்ளார்.