Publish Date: Wed, 20 May 2020 (10:25 IST)
Updated Date: Wed, 20 May 2020 (10:29 IST)
பாஜக பிரமுகர் கரு. நாகராஜன், கரூர் எம்பி ஜோதிமணியை விமர்சித்தது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்பி ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் மிக மிக கேவலமான முறையில் விவாதத்தில் பங்கேற்று வருவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், அவரின் கேவலமான வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபத்துடன் இருந்த நான், ‘அமைதியா இருங்க. பொறுப்பான கட்சியின் மூத்த தலைவர் நீங்களே இப்படிப் பேசலாமா’ என்று நெறியாளர் சொன்னபோது என்னையறியாமல் சிரித்துவிட்டேன். பொறுப்பான கட்சி, மூத்த தலைவர்… குட் காம்பினேஷன்! #I_Stand_With_Jothimani என பதிவிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான பேச்சுக்கு நிகழ்ச்சியின் நெறியாளர் அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது. அந்த விவாதத்தை பார்த்தவர்கள் அனைவருமே பெரும்பாலான நேரம் கரு.நாகராஜனுக்கு ஏன் வழங்கப்பட்டது என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது.
வரம்புமீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என நெறியாளர் மீதும் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.