Publish Date: Tue, 05 Dec 2017 (18:03 IST)
Updated Date: Tue, 05 Dec 2017 (18:06 IST)
தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
விஷாலின் மனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் பரீசீலனையில் இருந்த விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
அந்நிலையில், தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்பதற்காக விஷால் தற்போது தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, வேலுச்சாமியிடம் பேசிய விஷால், என்னை முன் மொழிந்த நபர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் எனவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாக இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிடம் விஷால் கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சாலையில் அமர்ந்து விஷால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.