Publish Date: Sun, 14 Jun 2026 (11:43 IST)
Updated Date: Sun, 14 Jun 2026 (11:45 IST)
கடந்த திமுக ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சராக சேகர் பாபு செயல்பட்டு வந்தார். அப்போது அவரின் நடவடிக்கைகளை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் அருகே பாஜகவினர் தீபமேற்ற முயல அதை திமுக அரசு தடுத்தது. நீதிமன்றம் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை.
நாங்கள் சமரசம் இன்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என சேகர் பாபு தொடர்ந்து சொல்லி வந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட்டார்.
விஜய் முதலமைச்சரானதும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் ஒருபக்கம் திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் விமர்சனங்களையும் தவெக பெற்று வருகிறது
இந்நிலையில், தமிழகத்தில் 214 கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர்கள் பதவிகளுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்திருக்கிறது. மேலும், அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூலை 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.