Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
நீங்கள் இறைவனிடம் சரண் புகுந்து விடுங்கள். அவர் உங்களை சூழ்ந்திருக்கும் துன்ப மேகங்களை விலக்குவார். இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்க்கையில் சாதகமான காற்று வீசும். இறைவன் உங்கள் குரலைக் கேட்பார். எல்லாவற்றையும் உங்களுக்குச் சாதகமாக செய்து தருவார். உங்கள் வாழ்வில் வெளிச்சம் வரும்.
சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.
உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே
கடவுளை அடையலாம்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.
அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.
இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.
முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.