Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
நீ உன்னைப் பற்றி என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை ஆகிவிடுவாய். ஆகவே உன்னைப் பற்றி உயர்வாகவே நினை. பாவிகள் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நினைத்து சோர்ந்து போய் இருக்காதே. உன்னால் எதுவும் முடியும் என்பதை மறக்காதே!
முதலில் உன்னை நம்பு. உனக்குள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன என்பதனை உணர். அதற்கேற்றவாறு செயல்படு. நீ சாதிக்கவல்லவன் என்பதில் உறுதியாக இரு. உன் முன் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.
நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் கடமைகளை, உன் சுக துக்கங்களை மறந்து நீ செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.
இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. ஆனால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.
ஏற்கனவே நடந்து முடிந்ததைக் கண்டு வருந்தாதே! எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் பரந்து விரிந்திருப்பதைப் பார். நம்பிக்கையோடு செயல்படு.
யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.