Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
ஆவணி மாதத்தில் பௌர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும். அப்போது தொடங்கிய புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை இரண்டு வாரம் இந்த மகாளய பட்சம் ஆகும். இந்த மாதம் முழுவதும் முன்னோர்களுக்கு உகந்த காலமாக கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யப்படும் என்பதால், மற்ற நல்ல காரியங்களை குடும்பத்தில் செய்வதில்லை. இறந்த நம் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த நாட்களிலோ, அமாவாசை நாட்களிலோ திதி கொடுக்க மறந்து விட்டாலோ இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அதற்கான முழு பயனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள், பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது, மிகவும் நல்லது ஆகும்.
மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.
இந்நாட்களில் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
மகாளய அமாவாசையில் செய்யும் அன்னதானம், முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும். இந்த தான, தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் முன்னோர்கள், மிகவும் திருப்தியுடன், தமது சந்ததியினரை மன நிறைவுடன் வாழ்த்துவார்கள்.