Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
அரேபியாவிலுள்ள மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) மக்காவில் நிலவிய மூடநம்பிக்கைகளை, இறைவனைப் பற்றிய தவறான கருத்துக்களை, அநீதிகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார். மக்காவிற்கு அருகிலுள்ள ‘ஹிரா’ என்ற குகையில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அவ்வேளையில் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் அவருக்கு இறைவசனங்கள் அருளப்பட்டன.
“ஓதுவீராக! படைத்த இறைவனின் திருப்பெயரைக் கொண்டு! இரத்தக்கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன்றியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான் என்ற வசனங்களே தொடக்கத்தில் நபிகளாருக்கு அருளப்பட்ட வசனங்களாகும்.
இது ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் ஒன்றில் நடைபெற்றது. அன்றிலிருந்து இருபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இறைவசனங்கள் நபிகளாருக்கு அருளப்பட்டுக் கொண்டேயிருந்தன. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அவ்வசனங்களின் மூலம் மனித குலத்திற்கு அறிவிக்கப்பட்டது. ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானில் அதை அதிகம் வாசிக்கிறார்கள். முழு திருக்குர்ஆனையும் தொழுகைகளில் ஓதுகின்றார்கள்.