Publish Date: Tue, 17 Jul 2018 (19:18 IST)
Updated Date: Tue, 17 Jul 2018 (19:26 IST)
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். மலைபோல் உள்ள இவரது சாதனையை முறியடிப்பது அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதை கிரிக்கெட் விமர்சகர்களே ஒப்புக்கொள்வர். இந்த நிலையில் பேட்டிங்கில் கிங் என்று பெயரெடுத்த சச்சினின் வாரிசான அர்ஜூன் தெண்டுல்கர் பவுலிங்கில் அசத்தி வருகிறார். உள்ளூர் மற்றும் 16 வயதுக்குரிய அணிகளில் விளையாடிய அர்ஜூன் தெண்டுல்கர் முதல்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
அர்ஜூன் தெண்டுல்கர் தற்போது இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அர்ஜூன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் இரண்டு மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக அர்ஜுன் தெண்டுல்கர் வீழ்த்திய முதல் விக்கெட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் சச்சின் புரிந்த நிலையில் அவருடைய மகன் இன்று, முதல் விக்கெட்டை வீழ்த்தி தனது சாதனையை தொடங்கியுள்ளார். இவரது சாதனை சச்சின் சாதனையையும் விஞ்சுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்