தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த படத்தில் அமீர்கான் தாஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விக்ரம் படத்தின் ரோலக்ஸ் போல அது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையேத் தந்தது. ஏனென்றால் அந்த கதாபாத்திரத்துக்குக் கதையில் எந்த தேவையும் இல்லை, வெறுமனே வணிக நோக்கத்துக்காக மட்டுமே வைக்கபட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அமீர்கானின் வட இந்திய ரசிகர்கள் ஏன் இந்த படத்தில் அவர் நடித்தார் என்றெல்லாம் புலம்பினார்கள்.
இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் பேசிய அமீர்கான் “கூலி படத்தில் நான் கிரியேட்டிவ்வாக ஈடுபடவில்லை. அதனால் என் கதாபாத்திரம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. நான் ரஜினி சாருக்காகதான் நடித்தேன். என் கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை. அதனால் இனிமேல் இதுபோன்ற வேடங்களில் நடிக்கும் போது கவனமாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.