இயக்குனர் ராஜேஷின் முதல் படம் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவா தற்போது 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா மனசுல சக்தியின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்கி தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தார் ராஜேஷ். கதையே இல்லாமல் எப்படி ஹிட் தருகிறார் என எல்லோருக்கும் ஆச்சரியம். அந்த திருஷ்டி நான்காவது படத்தில் கழிந்தது.
அடுத்தடுத்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அதுபோல ஜீவாவும் மோசமான படங்களாகக் கொடுத்து மார்க்கெட் அவுட் ஆனார். அதனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதையடுத்து சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகம் எடுக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது 16 ஆண்டுகள் கழித்து ஜீவா- எம் ராஜேஷ்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் ஒரு படத்துக்காக இணையவுள்ளதாகவும் அந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் SMS 2 ஆக இருக்கும் யூகிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்துக்கு “ஜாலியா இருந்த ஒருத்தன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சந்தானம் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.