கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் எங்கே ?
கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் எங்கே ?
Publish Date: Mon, 25 Apr 2016 (04:21 IST)
Updated Date: Mon, 25 Apr 2016 (05:03 IST)
கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீடு மற்றும் குடோன்களில் சுமார் ரூ 5 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதில் இருந்து விலகி, புதிய நிதி நிறுவனம் துவங்கினார் அவரது மகன் அன்புநாதன்.
தனது உறவினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி நட்பு கிடைத்தது. அது முதல் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றார். பின்பு, திண்டுக்கலில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்லும் போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நட்பு கிடைத்தது. இதனையடுத்து, அவரது பைனாஸ் தரம் கிடுகிடு என உயர்ந்தது. பின்பு, சினிமா பைனான்சியராக வலம் வந்தார். தற்போது, தமிழக அமைச்சர்கள் பலருக்கும் பணம் சப்ளை செய்யும் நபராக வலம் வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்புநாதன் வீடு மற்றும் குடோனில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.4.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்புநாதனின் குடோன் மற்றும், வீடுகளில் 22 பணம் எண்ணும் இயந்திரம், கள்ள நோட்டு கண்டறியும் கருவி, விலை உயர்ந்த 4 சொகுசு கார்கள், ஆம்புலன்ஸ் வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.